ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை தமிழ்நாடு எரி சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
உப்பூர் அனல் மின் நிலையப் பணிகள் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் வீணாகியுள்ளதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உப்பூர் அனல் மின் நிலையப் பணிகள் எதற்காக நிறுத்தப்பட்டன என்பது குறித்து உரிய விளக்கம் இல்லை என்றும், கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் திட்டப் பகுதியை நேரில் ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது உப்பூர் அனல் மின் நிலையப் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு, திட்டப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படாது என்று தெரிவித்தார்.
அவற்றின் பராமரிப்புப் பணிகள் மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்றும், இதனை விமான நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுவதாகக் கருதக்கூடாது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.




You must be logged in to post a comment.