ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் வயல்வெளிகளில் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின்கம்பங்களும், தாழ்வாகச் செல்லும் உயர்மின்னழுத்த மின்கம்பிகளும் விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
சின்னக் கீரமங்கலம் அருகே பறையனேந்தல் குடியிருப்பு எதிர்ப்புறம் உள்ள வயல்வெளியில் மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், ஆதியூர் அருகே
மல்லிக்குடி மற்றும் வெளியங்குடி பகுதிகளில் உயர்மின்னழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதாகவும், இதனால் டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வயல்வெளிகளுக்குள் கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
விதைப்பு முதல் அறுவடை வரை ஒவ்வொரு கட்டத்திலும் மின்கம்பிகளின் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிறிய தவறுகூட உயிரிழப்பு உள்ளிட்ட மிகப்பெரிய அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆபத்தான மின்கம்பங்கள் மற்றும் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும், தாழ்வாகச் செல்லும் உயர்மின்னழுத்த மின்கம்பிகளை பாதுகாப்பான உயரத்திற்கு மாற்றி அமைத்து, விவசாய இயந்திரங்கள் தடையின்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





You must be logged in to post a comment.