ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முருகன் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம்–திருவாடானை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன் ஆகியோர் ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது சில உணவகங்களில் சிக்கனுக்கு அதிக அளவில் கலர் பயன்படுத்தப்பட்டதும், குளிர்சாதனப் பெட்டியில் முந்தைய நாள் பயன்படுத்திய சுமார் 23 பரோட்டாக்கள், 12 கிலோ வேகவைத்த சாதம், 4 கிலோ வேகவைத்த நூடுல்ஸ், 6 கிலோ பழைய மைதா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டன.
விதிமுறைகளை மீறிய உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்களில் தரமற்ற மற்றும் பழைய உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா, தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.