கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை நலச் சங்கம், நோயாளிகள் பாதுகாப்புக் குழு மற்றும் அரசு மருத்துவர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் மகாராஜா தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் விஜயா, டாக்டர் தாரணி பிரியா, டாக்டர் சசிகுமார், சுபா மருத்துவமனை மருத்துவர் டாக்டர் மகேஸ்வரன், டாக்டர் குருசாமி உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், நோயாளிகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர் பாஷா சனாவாஸ், ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுணா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்குத் தேவையான உயர்தர மருத்துவ வசதிகள், அவசர சிகிச்சைப் பிரிவில் விரைவான சேவை மற்றும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனை வளாகம், வார்டுகள் மற்றும் கழிப்பறைகளைத் தூய்மையாகப் பராமரித்தல், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் அமைத்தல், வழிகாட்டுப் பலகைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
சிகிச்சைக்காக வரும் பொதுமக்களிடம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கனிவான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதுடன், நோயாளிகளின் குறைகளை உரிய முறையில் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவச் சேவை வழங்கும் நோக்கில் மருத்துவமனை நலச் சங்கம், நோயாளிகள் பாதுகாப்புக் குழு மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைக் குழு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.







You must be logged in to post a comment.