கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்விக் குழுமம் மற்றும் காரமடை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ‘வித்யா வந்தனம்–2026’ கல்விச் சிறப்பு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு நஞ்சையா லிங்கம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரோட்டேரியன் ஏ.கே.எஸ்.எஸ். ஞானசேகரன் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “வித்யா வந்தனம் என்பது கல்வி அறிவிலும் வித்தையிலும் சிறந்து விளங்கும் பெருமக்களை வணங்கி மகிழும் புனிதமான நிகழ்வாகும். ஒவ்வொரு மனிதருக்கும் முதல் ஆசிரியர் தாயே. அன்பு, அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தேசப்பற்று உள்ளிட்ட உயர்ந்த பண்புகளை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கும் தாய்க்கு ஈடாக எதுவுமில்லை.
கடமை தவறாமையை சூரியனிடமும், விடாமுயற்சியை கடலலையிடமும், சுறுசுறுப்பை எறும்புகளிடமும் கற்றுக்கொள்வது போல, இயற்கையே நமக்கு சிறந்த ஆசானாக விளங்குகிறது. இயற்கை கற்றுத்தரும் பாடங்களில் இருந்து நன்மைகளைப் பிரித்தெடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்களை தலைமைப் பண்புமிக்கவர்களாகவும், சமூக மாற்றத்திற்கு ஏற்ப செயல்படும் சிறந்த ஆளுமைகளாகவும் செதுக்கும் கடமை ஆசிரியர்களின் கைகளிலேயே உள்ளது” என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை கே.ஜி. மருத்துவமனைத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம் மற்றும் கோவை தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஏ. பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கல்விச் சிறப்பு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
மேலும், நிறுவனச் செயலாளர் எம். சத்தியமூர்த்தி, நிர்வாக அலுவலர் டி.டி.எஸ். பாஸ்கரன், முதல்வர் ஜே. கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.






You must be logged in to post a comment.