ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு ஓடாவி தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கடும் அவதியடைந்த அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கத் திரண்டனர்.
அப்போது, பேரூராட்சி செயல் அலுவலர் அலுவலகத்தில் இல்லாததுடன், அங்கிருந்த பிற அலுவலர்களும் பொதுமக்களின் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் அலுவலர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
அத்தியாவசியத் தேவையான குடிநீர் பல நாட்களாக வழங்கப்படாததால் தங்களது அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தொண்டி பேரூராட்சியில் ஏற்கனவே 3-வது மற்றும் 4-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி பலமுறை கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல்வேறு வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, தொண்டி பேரூராட்சியில் குடிநீர் விநியோகத்தின் அவசியத்தை குறித்து எடுத்துக்காட்டுகிறது.




You must be logged in to post a comment.