ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, மேலத்தெருவில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழாவை முன்னிட்டு, மேலத்தெரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 2-ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்… அவற்றை அடக்க துணிந்து களம் இறங்கிய வீரர்கள் என போட்டி தொடங்கிய முதலே பரபரப்பும், விறுவிறுப்பும் அடங்கிய காட்சியாக அமைந்தது இதில் 10-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று வீரர்களுக்கு சவால் விடுத்தன.
காளைகளின் வேகத்தையும், துள்ளலையும் சமாளித்து அவற்றை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை காண திருவாடானை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக கண்டு ரசித்தனர். காளைகளின் சீற்றமும், வீரர்களின் துணிச்சலும் பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போட்டியின்போது காளைகள் முட்டியதில் 5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மொத்தத்தில், கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு, பாரம்பரியத்தின் வீரத்தையும், இளைஞர்களின் துணிச்சலையும் பறைசாற்றும் வகையில் உற்சாகத்துடன் நிறைவடைந்தது.




You must be logged in to post a comment.