கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு காவல் துறையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையினர், காவல் துறையினருடன் இணைந்து இரவு பகல் பாராது பல்வேறு பாதுகாப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழ்நாடு ஊர்க்காவல் படையின் கோயம்புத்தூர் சரக தளபதி தனசேகர் தலைமையில், கோவை சரக அளவிலான ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் யுனைடெட் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றன. கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் பிரதேச தளபதி மற்றும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சேர்மன் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இப்போட்டிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கைப்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நான்கு மாவட்டங்களில் இருந்து சுமார் 250 ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் தேனியில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கோவை சரகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்க்காவல் படை பிரதேச தளபதிகள், துணை பிரதேச தளபதிகள், படைத் தளபதிகள், காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட பிரதேச தளபதி பிரசன்னா, திருப்பூர் மாநகர பிரதேச தளபதி பண்பரசு, திருப்பூர் மாவட்ட பிரதேச தளபதி மனோகரன் மற்றும் துணை பிரதேச தளபதிகள் கார்த்திகேயன், ஜெயபால், நித்யா, ஹரிகோபாலன், தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை யுனைடெட் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் படைத் தளபதி ஜெய்குமார் நன்றியுரை வழங்கினார்.





You must be logged in to post a comment.