கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா சி.ஐ.டி.யு. பொது தொழிலாளர் சங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ராமகிருஷ்ண மடம் சுவாமிஜி அதீஸ்வர நந்தா மற்றும் சி.ஐ.டி.யு. மாநிலக் குழு உறுப்பினர் சத்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற முகாமில், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் குணசேகரன், நியாஸ், லூயிஸ்ராஜ், அப்துல் ரகுமான், சன்ஃபீர், யாசர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வறுமைக்கோட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் மற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கில் மாதந்தோறும் நடைபெற்று வரும் இந்த மருத்துவ முகாமில் மருத்துவர் நந்தகிருஷ்ணன் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தார்.
முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமில் பொதுவான உடல்நலப் பரிசோதனை, நாடித் துடிப்பு, உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், நாள்பட்ட நோய்களுக்கான தொடக்கநிலை பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
பருவகால நோய்களைத் தடுக்கும் முறைகள், முறையான உணவுப் பழக்கம் மற்றும் பணிச்சூழல் சார்ந்த உடல்நல மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு சுகாதார ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப பயனாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், வைட்டமின் மாத்திரைகள், டானிக்குகள் மற்றும் களிம்புகள் உள்ளிட்ட மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள சிரமப்படும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு இம்முகாம் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.




You must be logged in to post a comment.