கோவில் திருவிழாவையொட்டி பிரம்மாண்ட படகுப்போட்டி – 15-க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான பாய்மரப் படகு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடலில் சீறிப்பாய்ந்த பாய்மரப் படகுகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட படகுகள் ஆர்வத்துடன் பங்கேற்றன.
போட்டிக்காக கடலில் 15 கடல் மைல்கள் தொலைவு எல்கையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு படகிலும் 7 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டனர்.
காற்றின் வேகத்திற்கு ஏற்ப படகுகள் வேகத்தில் முன்னேறிய நிலையில், காற்றின் திசையை கணித்து பாய்மரத்தை சுறுசுறுப்பாக திருப்பிய வீரர்களின் திறமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பாய்மரப் படகு போட்டியை காண சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். கடலில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியை கரையில் நின்றபடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
போட்டி நிறைவடைந்ததும் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பையும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இப்பிரம்மாண்ட படகு போட்டி திருப்பாலைக்குடி பகுதி மக்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.




You must be logged in to post a comment.