கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
ராமநாதபுரம் நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ராமநாதபுரம் மீன் மார்க்கெட் எதிரே உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த ஒரு கடையில் தடை செய்யப்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பிளாஸ்டிக் கவர்கள், பல்வேறு வண்ணங்களில் இருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
கடையில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மொத்த எடை சுமார் 500 கிலோ இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தின் பரபரப்பான நகரப் பகுதியில் அதிகளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




You must be logged in to post a comment.