நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு, அமைதி, மனிதநேய போதனைகளை நினைவுகூர்ந்து உலக நன்மைக்காக இறை வசனம் ஓதி வேண்டுதல்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மீலாது நபி விழாவை முன்னிட்டு நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஏர்வாடியில் உள்ள புனித தர்கா வளாகம் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் போல் காட்சி அமைக்கப்பட்டு சிறப்பு மார்க்க நிகழ்ச்சிகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதர்களிடையே அன்பு, இரக்கம், சகோதரத்துவம், நேர்மை, நீதி மற்றும் மனிதநேயம் நிலவ வேண்டும் என்பதை தனது வாழ்வின் மூலம் எடுத்துரைத்தார்கள். ஏழைகள், ஆதரவற்றோர் மற்றும் தேவையுடையோருக்கு உதவுதல், அண்டை வீட்டாரை மதித்தல், பிற உயிர்களிடமும் கருணையுடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட உயர்ந்த நற்குணங்களை உலக மக்களுக்கு போதித்தார்கள்.
வெறுப்புக்கு பதிலாக அன்பையும், பகைமைக்கு பதிலாக சகோதரத்துவத்தையும், அநீதிக்கு பதிலாக நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயரிய போதனைகளை நினைவுகூரும் வகையில் ஏர்வாடி தர்காவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
உலக மக்கள் அனைவரும் அமைதியுடனும், நலத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும்; இயற்கை பேரிடர்கள், நோய்கள் மற்றும் துன்பங்களில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; உலகில் அமைதி நிலவ வேண்டும் என வேண்டி தர்கா வளாகத்தில் இறை வசனங்கள் ஓதப்பட்டு சிறப்பு துஆ பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
மீலாது நபி விழா, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் நற்குணங்களை நினைவுகூர்ந்து, மனிதநேயம், அன்பு, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றை அனைவரிடமும் வளர்க்கும் விதமாக நடைபெறும் நிகழ்ச்சியை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன




You must be logged in to post a comment.