ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்குத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்யவும் வேண்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
முளைக்கொட்டு உற்சவம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு நேரங்களில் ஒரு வார காலமாக ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை இரவு திருப்புல்லாணி ஊரணியிலிருந்து கரகம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாலையில் ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்திலிருந்து பெண்கள் முளைப்பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் ஆதிஜெகநாத பெருமாள் ஆலயத்தை சென்றடைந்து கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் ஊரணியில் முளைப்பாரிகளை கரைத்து, விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்யவும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
விழாவையொட்டி வடக்குத்தெரு பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை வடக்குத்தெரு பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் சிறப்பாக செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.