தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் போட்டிகளை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் மாநில அளவில் நமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பாடல், நடனம், கிராமிய கலை, குழு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வட்டார அளவில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இளையோர் திறன் என்ற தலைப்பில் கலைத் திருவிழா போட்டிகள் நடந்தது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் காதர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் விழாவை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் மத்தியில் பேசியதாவது, இங்கு நடைபெறும் கலைத்திருவிழா ஒரு நல்ல முயற்சியாக தெரிகின்றது. இதை போல் மாவட்ட அளவில், மாநில அளவில், நமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியினை பார்க்கும் போது நான் பள்ளியில் படிக்கும் பொழுது நடைபெறும் போட்டிகள் தான் நினைவுக்கு வருகிறது. எங்களது பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை போட்டிகள் நடைபெறும். ஒரு முறை மட்டுமே இப்போட்டிகளில் நான் கலந்து கொண்டேன்.
அதன் பிறகு சில சமயங்களில் ஆசைப்படுவது உண்டு. ஆனால் அதற்கான நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இது போன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. மாணாக்கர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நிறைய நிகழ்வுகள் நடைபெறுவதை நான் பார்க்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அனைத்து நிகழ்வுகளுக்கும் தங்களை தயார் செய்து வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக இப்படிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த மாதிரி நிகழ்வுகள் நடைபெறுகையில், அதில் கலந்து கொள்ளும் போது தான் உங்களுக்குள் இருக்கும் திறமை வெளிவரும்.
பெற்றோர், ஆசிரியர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தான் நாம் கலந்து கொள்வோம். ஆனால் இவ்வாறு போட்டிகளில் கொள்ளும் போது நம் திறமைகள் நமக்கு தெரிய வரும். சில நேரங்களில் வெளியே செல்லும் போது தன்னம்பிக்கை நமக்கு வரும். நமது முயற்சியில் தான் இருக்கிறது. பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இருக்கிறது. ஆசிரியர்களுக்கும், பள்ளியில் இருந்து வந்திருக்கும் மாணாக்கர்கள் அணிக்கும் என்னுடைய நன்றி. மாணவர்களை ஊக்குவித்து கொண்டு வந்திருக்கும் ஆசிரியர்களுக்கும் எனது நன்றி. மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் காதர்மீரான், கல்லூரி தாளாளர் ராஜகுமார், முதல்வர் (பொ) ஷீலா நவரோஸ், ஆசிரியர்கள், பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.