திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் ஆளுநர் உத்தரவின் படி பாடப்படும் என நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு பல்கலைக் கழகத் துணைவேந்தர் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் துணைவேந்தர், தமிழ்நாடு ஆளுநர் ஆகியோரை கண்டித்தும், திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர், சமூக நீதிக்கான வழக்கறிஞர், ப.செந்தில்குமார் தலைமையில், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கக்கூடிய தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழ் மொழி, தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை செய்யக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தும், பல்கலைக்கழக நிர்வாகம், தமிழ்நாடு ஆளுநர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவும் கோரிக்கை முழக்கமிட்டனர்.
இந்நிகழ்வை சமூக நீதிக்கான வழக்கறிஞர் பிரபாகர் ஒருங்கிணைத்தார். இதில் மூத்த வழக்கறிஞர்கள், அப்துல் நிஜாம், இளமாறன் கோபால், கொம்பையா, உத்தர நாயகம், கதிரவன் , சிலம்பரசன், அசோக்குமார் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் தமிழர் சட்ட இயக்க தலைவர் பார்த்திபன், சரவண டிக்சன், ஜோதி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.