இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள A. மணக்குடி கிராமத்தில், தமிழக அரசால் கடந்த 1995ஆம் ஆண்டு 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் கிராம உதவியாளராக (தலையாரி) பணியாற்றிய தென்னவன், சில மேலதிகாரிகளின் உடந்தையுடன் அரசின் இலவச வீட்டுமனை பட்டாக்களை தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றி வழங்கியதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி, முறைகேடாக மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பட்டாக்களை ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், A. மணக்குடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, திருவாடானை வட்டாட்சியர் ஆண்டி, கிராம உதவியாளர் தென்னவனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
அரசின் நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் நில ஆவணங்களில் முறைகேடு, போலி ஆவணங்கள் தயாரித்தல், விதிமீறி பெயர் மாற்றம் செய்தல் போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தால், உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.