ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவொற்றியூர் அருகே உள்ள முகிழ்தகம் விலக்கு பகுதியில், திருவொற்றியூரிலிருந்து மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையோரத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின்சாரம் வழங்குவதற்காக இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் நீரேற்ற நிலையம் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பராமரிப்பின்றி விடப்பட்டுள்ள மின்கம்பங்கள் பலத்த காற்றின் தாக்கத்தால் சாலையை நோக்கிச் சாய்ந்து, எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளன.
தற்போது வெறும் மின்கம்பங்கள் மட்டுமே ஆபத்தான நிலையில் நிற்பதால், அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் உயிர் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆபத்தான நிலை குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பெரும் விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றவோ அல்லது பாதுகாப்பான முறையில் சீரமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.