ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட மாவூர் மற்றும் மாவூரிலிருந்து பாண்டுகுடி செல்லும் சாலை வழியிலுள்ள காடு மற்றும் விவசாய நிலப் பகுதிகளில், சவடு மண் எடுப்பதற்கான அனுமதியை தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோத மணல் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்களும் விவசாயிகளும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
திருவாடானை அருகேயுள்ள மாவூர் கருப்பன் கோவில் தென்பகுதியில் உள்ள மணல் மேடான நிலங்கள் குறிவைக்கப்பட்டு, அங்கிருந்து மிகப்பெரிய அளவில் மணல் அள்ளப்பட்டு பல நூறு யூனிட் அளவிற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பகல் நேரங்களில் சேகரிக்கப்படும் இந்த மணல், இரவு நேரங்களில் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் ரகசிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தண்ணீரில் அலசி ஆற்று மணலைப் போன்ற தோற்றத்திற்கு மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது
இந்த நடவடிக்கைகள் உண்மையாக இருந்தால், அது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்களின் வளம் குறைதல், நிலத்தடி நீர்மட்டம் சரிவு மற்றும் இயற்கை வளங்களின் சீரழிவு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
இதனைக் கேட்டால் “சொந்த தேவைக்காக அடுத்த வயல்களில் கொட்டுவதற்காகவே மணலை குவித்து வைத்துள்ளோம்” என்று விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பல நூறு யூனிட் அளவிற்கு மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாய நிலங்களின் நலன் மற்றும் பொதுமக்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், வருவாய்த்துறை, கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு, சட்டவிரோத மணல் கடத்தல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், இயற்கை வளங்களை பாதுகாக்க நிரந்தர கண்காணிப்பு மேற்கொள்ளவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.