ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் நீடித்து வரும் தொடர் மின்வெட்டையும், மின் கட்டண கணக்கீட்டில் கணினி மூலம் நடைபெறும் தாறுமாறான கணக்கீட்டையும் கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கீழக்கரை துணை மின்நிலையம் அருகே வியாழக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் செயல் தலைவர் முஹைதீன் பாரூக் தலைமை வகித்தார். எஸ். செய்யது அசஹாப் (கீழை அஸ்ரப்) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன் வரவேற்புரை ஆற்றினார்.
வழக்கறிஞரும் நகர மன்ற துணைத் தலைவருமான ஹமீது சுல்தான் மற்றும் எஸ்டிபிஐ நகர செயற்குழு உறுப்பினர் அகமது நதீர் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
திமுக நகர செயலாளர் பஷீர், எஸ்டிபிஐ நகர இணைச் செயலாளர் ஹமீது பைசல், எஸ்டிபிஐ மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள், கீழக்கரை மக்களை பாதித்து வரும் தொடர் மின்வெட்டுக்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மின் கட்டண கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாவட்ட, தொகுதி மற்றும் நகர நிர்வாகிகள், பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இறுதியாக, எஸ்டிபிஐ தொகுதி செயற்குழு உறுப்பினர் ஃபஹ்ருதீன் அலி அகமது நன்றியுரை ஆற்றியதுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.










You must be logged in to post a comment.