ஆதியூரில் ஆடி உற்சவத்தை ஒட்டி பரபரப்பாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு – வெற்றி வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்குட்பட்ட ஆதியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலின் 16-ஆம் ஆண்டு ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு, கிராம மக்கள் மற்றும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய 3-ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெற்றது.
போட்டியில் 10-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறங்கின. சீறிப்பாய்ந்த காளைகளை தைரியத்துடன் எதிர்கொண்ட வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின; சில காளைகள் வீரர்களின் முயற்சியை முறியடித்து தங்களது வீரத்தை நிரூபித்தன.
போட்டியில் காளைகளை வெற்றிகரமாக அடக்கிய வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பாராட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
காலை தொடங்கிய இந்த பாரம்பரிய விளையாட்டு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆதியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஆடி உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு, பாரம்பரியத்தையும், வீரத்தையும், கிராமிய பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக அமைந்தது.




You must be logged in to post a comment.