ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டி பேரூராட்சியின் 5-வது வார்டில் கடந்த 10 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய பொதுமக்கள், இன்று காலி குடங்களுடன் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள், முதியோர் உள்ளிட்ட ஏராளமானோர் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் போன்ற அடிப்படை தேவையைக்கூட உடனடியாக வழங்கத் தவறிய நிர்வாகத்தின் அலட்சியத்துக்கு எதிராக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்காலிகமாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், பழுதடைந்த குடிநீர் விநியோக அமைப்பு விரைவில் சீரமைக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
இருப்பினும், “இன்று மாலைக்குள் சீரான குடிநீர் விநியோகம் தொடங்கவில்லை என்றால், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும்” என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து நீடித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறையும் உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.