ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட அரசூர் மற்றும் பாரூர் கிராமங்களை இணைத்து, மதுரை–தொண்டி மற்றும் திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய தார்ச் சாலை, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து மண் சாலையாக மாறியுள்ளது.
சாலையின் மோசமான நிலை காரணமாக பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தினமும் கடும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். மேலும், பள்ளிப் பேருந்துகள், அவசர மருத்துவ தேவைக்கான ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் நிலை காரணமாக கிராமத்திற்குள் வர மறுப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மற்றும் புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி, விவசாயப் பணிகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அரசூர்–பாரூர் சாலையை தரமான முறையில் புதுப்பித்து, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்




You must be logged in to post a comment.