ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிரங்குடி ஊராட்சியின் மேலவலசை கிராமத்தில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி, நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலவலசை கிராமத்தில் 170-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நீண்ட காலமாக குடிநீர் பற்றாக்குறையால் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். குடிநீர் வசதி செய்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மேலவலசை கிராமத்திற்கு உடனடியாக குடிநீர் குழாய் அமைத்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், தங்களது கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்





You must be logged in to post a comment.