விருவீடு அருகே டாஸ்மாக் மது கடை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு. சாலை மறியல் போராட்டம். காவல் நிலையம் முற்றுகை. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை. பரபரப்பு.
வத்தலக்குண்டு அடுத்த, விருவீடு அருகே சந்தையூரில் டாஸ்மாக் மது கடை அமைப்பதற்கு கிராம மக்கள், சனிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர், காவல் நிலையம் முற்றுகையிட்ட கிராம மக்கள், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த, ரெங்கப்பநாயக்கன்பட்டியில் சாலையோரம் டாஸ்மாக் மது கடை அமைக்கப்பட்டு உள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் கடந்த வாரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்,ரெங்கப்பநாயக்கன்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை விருவீடு அருகே சந்தையூர், தாதபட்டி இடையே சாலையோரம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சந்தையூர், தாதப்பட்டி இடையே டாஸ்மாக் மது கடை அமைப்பதால், அந்த வழியாக விருவீடு, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், அலுவலகப் பணிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது சம்பந்தமாக சந்தையூர், தாதபட்டி, ராஜதாணிகோட்டை, தெற்கு வளையப்பட்டி, வடக்கு வளையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் சம்பந்தப்பட்ட விருவீடு காவல்துறையினர் மற்றும் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம கோரிக்கை மனு அளித்த நிலையில், சந்தையூர், தாதப்பட்டி இடையே டாஸ்மாக் மது கடை அமைப்பதற்கான கட்டிடங்கள் அமைத்து, முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.
இதனை கண்டித்து சந்தையூர், தாதபட்டி உள்ளிட்ட இப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் விருவீடு காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, டாஸ்மாக் மது கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி, வட்டாட்சியர் ராமசாமி என்பவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, வட்டாட்சியருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.




You must be logged in to post a comment.