செங்கோட்டை – தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னக இரயில்வே துறை பொது மேலாளர் ஆர்.என்.சிங் இராஜபாளையம் ரயில் நிலையத்தில் 10.07.2026 அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி. வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நீண்டகால தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தினார்.
தென்னக இரயில்வே பொது மேலாளரிடம் தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்:
செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயிலுக்கு (ரயில் எண் 20681/20682) தினசரி சேவை அறிமுகம் செய்ய வேண்டும். சென்னை எழும்பூர் மற்றும் தென்காசி இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகம் செய்ய வேண்டும்.
ஈரோடு-திருப்பூர் வழியாக கொல்லம் மற்றும் பெங்களூரு செல்லும் புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும். ரயில் எண் 16721 மதுரை இன்டர்சிட்டி விரைவு ரயிலை (கோயம்புத்தூர் – மதுரை) செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்திற்கு இடமளிக்கும் வகையில் செங்கோட்டை நிலையத்தில் 5 மற்றும் 6 ஆம் புதிய நடைமேடைகள் அமைக்க வேண்டும். முன்னர் மூடப்பட்டிருந்த சோழபுரம், கரிவலம் வந்தநல்லூர் மற்றும் நைனாகரம் (நிறுத்தம்) ஆகிய இரயில் நிலையத்தை மீண்டும் திறக்க புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை பொது மேலாளரிடம் தென்காசி எம்.பி வலியுறுத்தினார். மனுவை பெற்ற பொதுமேலாளர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இந்நிகழ்வில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி மாவட்ட மருத்துவரணி கவுன்சிலர் வைரமுத்து, சுப்புலட்சுமி கணேசன், ராதா, மாணவரணி நாகேஷ்வரன், வார்டு செயலாளர் மயில்வாகனன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.