ரூ.2.71 கோடி மதிப்பிலான 904 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு!
161 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் நீதிமன்ற அனுமதியுடன் ஒரே நாளில் அழிப்பு – இராமநாதபுரம், சிவகங்கை காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், இராமநாதபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 161 போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 904.485 கிலோ கிராம் கஞ்சா நீதிமன்ற அனுமதியுடன் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.
புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களின் அனுமதியைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 3-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் 2 Aseptic System (Bio-Medical Waste Management Company) வளாகத்தில் இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அழிக்கப்பட்ட கஞ்சாவில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 800.908 கிலோ கிராம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 103.577 கிலோ கிராம் கஞ்சா அடங்கும்.
இந்த நடவடிக்கை, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், தலைமையிலான போதைப்பொருட்கள் அழிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், முன்னிலையில் கஞ்சா முழுமையாகவும் பாதுகாப்பான முறையிலும் அழிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிக்கும் நோக்கில் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றி உடனுக்குடன் அழிக்கும் நடவடிக்கைகளும் தொடர்வதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.