03 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாக்கடை கால்வாயின் மீது குடிநீர் குழாய்: உடைந்த குழாயில் குடிநீர் வீணாகிறது; மாசடைந்த நீர் கலக்கும் அபாயம் – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.!

சாக்கடை கால்வாயின் மீது குடிநீர் குழாய்: உடைந்த குழாயில் குடிநீர் வீணாகிறது; மாசடைந்த நீர் கலக்கும் அபாயம் – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.!

எழுதியவர்: Baker BAker July 3, 2026, 7:34 am

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பிரதான குழாய் வால்வு (கேட் வால்வு) அமைந்துள்ள பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்க் குழாய் சாக்கடை கால்வாயின் மீது அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடும், பாதுகாப்பான குடிநீர் விநியோகம் குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.

சாக்கடை கால்வாயின் மீது அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாயின் அடிப்பகுதியில் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தினமும் பெருமளவில் குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் நேரங்களில் குழாயில் எதிர்மறை அழுத்தம் ஏற்பட்டு, சாக்கடை நீர் குடிநீர்க் குழாய்க்குள் உறிஞ்சப்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குடிநீர் மாசுபடுவதற்கும், தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வழிவகுக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தினந்தோறும் அந்தப் பகுதியில் உள்ள பிரதான வால்வை கண்டு கொள்வதே இல்லை என்றும், பொதுமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் இந்தப் பிரச்சினையை சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

மக்களின் உயிர் மற்றும் உடல்நலனுடன் நேரடியாக தொடர்புடைய முக்கியமான பிரச்சினையில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, சாக்கடை கால்வாயின் மீது அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாயை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல், உடைந்த குழாயை உடனடியாகச் சீரமைத்தல் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதார அபாயங்கள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு காணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!