குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா அறிவித்துள்ளார்.
இது குறித்து தென்காசி வெதர்மேன் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இக் காற்றழுத்தமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை மேற்கு தொடர்ச்சி மலை மாநிலங்களின் ஊடாக இழுக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் மேற்கு கடற்கரை மாநிலங்களான வடக்கு கேரளா கர்நாடகா மகராஷ்டிரா கோவா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைகிறது.
தெற்கு கேரளாவில் பருவமழை தீவிரமடைய வாய்ப்பு குறைவு என்பதால் தெற்கு கேரளாவை ஒட்டியுள்ள தென் தமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்யும். குற்றாலம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நாளை இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பதிவாகும்.
ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் குளு குளு தென்காசியில் குற்றால சீசன் களைகட்டும் என கணிக்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாகும் முதல் காற்றழுத்தம்: நடப்பு 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், இந்தியப் பெருங்கடல் பகுதிகளான வங்கக் கடலிலும் அரபிக்கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) கூட உருவாகவில்லை. இதற்கு முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏதும் உருவாகாமல் இருந்தது. அதன் பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு காற்றழுத்தம் ஏதும் உருவாகமல் இந்த ஜூன் மாதம் இருந்துள்ளது. இதனால் கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் ஜூன் மாதம் கடுமையான மழை பற்றாக்குறையை சந்தித்தது. இந்த நிலையில் வரும் 48 மணி நேரத்தில் வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்தம் உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் நிலவுகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.