30 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ்.மங்கலத்தில் பகிரங்கமாக நடக்கும் விதிமீறல்?சவடு மண் பெயரில் வணிகம் – அதிவேக டிராக்டர்களால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உயிர் அச்சம்.!

ஆர்.எஸ்.மங்கலத்தில் பகிரங்கமாக நடக்கும் விதிமீறல்?சவடு மண் பெயரில் வணிகம் – அதிவேக டிராக்டர்களால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உயிர் அச்சம்.!

எழுதியவர்: Baker BAker June 30, 2026, 7:45 pm

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் சவடு மண் எடுப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதி, அரசு விதிமுறைகளுக்கு முரணாக வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தகவலின்படி, மூன்று நபர்களுக்கு மட்டுமே சவடு மண் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் தினமும் சவடு மண் அள்ளப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு வணிக ரீதியாக கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அரசு விதிகளின்படி, சவடு மண்ணை வணிக நோக்கில் விற்பனை செய்ய அனுமதி இல்லை. இருப்பினும், இந்த விதிமீறல்கள் தொடர்பாக வருவாய்த் துறையோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ உரிய கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில், சவடு மண் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் குறுகிய சாலைகளில் அதிவேகமாக இயக்கப்படுவதால், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் சாலையைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்து நிகழக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காப்பதாகவும், சட்டவிரோத மண் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராக இதுவரை கணிசமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சிலர், அதிகாரிகள் மீது முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

எனவே,  மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை இணைந்து உடனடி ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல்கள் உறுதியானால் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை ரத்து செய்து, சட்டவிரோதமாக சவடு மண் வணிகத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.மங்கலம் பகுதி பொதுமக்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

“உயிர் பலி ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டவிரோத சவடு மண் வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!