ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் மூவர் மீது வாள் மற்றும் அரிவாளால் வெட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, கொங்குமுட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சிவகங்கை வந்தவாசி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிக்கு ரூ.9.50 லட்சத்திற்கு லாரி விற்பனை செய்திருந்தார். ஆனால், அதற்கான முழு தொகையை கோபி வழங்காததால் இருவருக்கும் இடையே நீண்டநாளாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருவாடனை அருகே உள்ள அடுத்தடுடி கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்த பாலகிருஷ்ணனை, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி, பெரிய கீரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பிளாண்ட் வளாகத்திற்கு கோபி அழைத்துள்ளார்.
அங்கு பாலகிருஷ்ணன் தனது உறவினர்களான பாலுச்சாமி மற்றும் குமாரவேலுவுடன் சென்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபி மற்றும் அவருடன் காரில் வந்ததாகக் கூறப்படும் ஐந்து பேர் இணைந்து, பாலகிருஷ்ணன், பாலுச்சாமி, குமாரவேலு ஆகிய மூவரையும் வாள் மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த மூவரும் உடனடியாக திருவாடனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவாடனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கோபி மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.




You must be logged in to post a comment.