ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த ஆடு திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயன்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து, மொத்தம் 74 ஆடுகளை மீட்டுள்ளனர்.
திருடப்பட்ட ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி பரமக்குடி ஆட்டு சந்தையில் விற்பனை செய்ய முயன்றபோது, ஆடுகளை இழந்த உரிமையாளர்கள் தங்களது ஆடுகளை அடையாளம் கண்டு கீழக்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முதற்கட்டமாக 7 ஆடுகளையும், செல்வம் (38), பவித்ரா (35), ராமநாதன் (33), தமிழரசன் (20) ஆகிய நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான செல்வத்தின் தோப்பு வீட்டிலிருந்து 13 ஆடுகள் மீட்கப்பட்டன. மேலும் நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனையில் கூடுதலாக 54 ஆடுகள் மீட்கப்பட்டன.
இதன்மூலம் 61 பெரிய ஆடுகள் மற்றும் 13 குட்டி ஆடுகள் என மொத்தம் 74 ஆடுகள் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் கீழக்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வந்த ஆடு திருட்டு சம்பவங்களை கண்டுபிடித்து பெருமளவில் ஆடுகளை மீட்ட காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.