ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி மரக்காயர் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான முகமது அலி ஜின்னா (58) கைது செய்யப்பட்டார்.
தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 51 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணேஷ், கூலிப், எம்.டி.எம் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட முகமது அலி ஜின்னா, திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




You must be logged in to post a comment.