ராமநாதபுரம் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், மேலும் தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்களில் பணிபுரியும் முஜாவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து மேற்கண்ட நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர் பதிவு மற்றும் நலத்திட்ட உதவிகளை எளிதாகப் பெறும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதால், தகுதியுடையோர் www.uwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை நேரில் தொடர்புகொள்ளலாம் அல்லது 04567-231050 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.