“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!
நடிகர் ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநரும், நடிகருமான சேரன் லாரன்ஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் எழுப்பும் எதிர்ப்புக் குரலுக்கு ஏதாவது கொடுத்து வாயடைக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்தே உங்களின் அரசியல் பயணம் எதை நோக்கிச் செல்கிறது என்பது புரிந்துவிட்டது என சேரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகரும், நடன இயக்குநருமன ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு யூகங்கள் பரவி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் இதுகுறித்து அறிவித்தார். விரைவில் அந்த முடிவை அறிவிப்பேன் என செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ராகவா லாரன்ஸ்.
தெருநாய் என சொன்ன லாரன்ஸ் அப்போது தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ராகவா லாரன்ஸ், புது ஏரியாவில் வாடகை வீட்டிற்குச் சென்றால், வெளியே இருந்து பார்த்தால் வீடு நல்லா இருக்கும். உள்ளே போனால் தான் அனைத்தும் தெரியும். ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும், அசைவம் தான் சாப்பிடும். அதற்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு இப்படி என்றால் நாட்டையே நம்பி அவர்களிடம் கொடுத்துள்ளீர்கள்.
மாற்றம் வேண்டும் என நினைத்து அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். தற்போது மாற்றம் வந்துள்ளது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் எனப் பேசினார் ராகவா லாரன்ஸ். இந்த பேச்சு தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்களை தெரு நாய்களுடன் லாரன்ஸ் ஒப்பிட்டுப் பேசிவிட்டார் என சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பேசிய வீடியோவை தொடர்பாக இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் அளித்திருக்கிறீர்கள் லாரன்ஸ். மக்களை தெருநாயாக சித்தரிப்பதையும், பிஸ்கட், பிரியாணி கொடுத்து மக்களை குரைக்கவிடாமல் பார்த்துக்கணும் என்று சொல்லி வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்கள் எழுப்பும் எதிர்ப்பு குரலுக்கு ஏதாவது கொடுத்து வாயடைக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்தே உங்களின் அரசியல் பயணம் எதை நோக்கிச் செல்கிறது என்பது புரிந்துவிட்டது. இதுவரை உங்களிடம் இருந்ததாக நினைக்கப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் ஏற்படச் செய்திருக்கிறது உங்களின் பேச்சு. இருப்பினும் உங்களுக்கும் இந்த மக்கள் வாக்களிப்பார்கள். கவலைப்பட வேண்டாம். இப்படிக்கு… பிஸ்கட் பிரியாணிக்காக கையேந்தாத மக்களில் ஒருவன்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்படத்தாக விளக்கம் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். ரசிகர்களும், மக்களும் என் தாய்க்கு சமமானவர்கள் என்று எப்பொழுதும் சொல்லும் ஆள் நான். நான் போய் மக்களை நாயுடன் ஒப்பிட்டதாக சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள். மக்களை நாய் என்று சொல்லும் அளவுக்கு இதயம் இல்லாதவன் நான் இல்லை. தயவுசெய்து முழு வீடியோவையும் பார்த்து, நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.




You must be logged in to post a comment.