சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் இந்த சிறப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அவற்றில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சோதனையின்போது நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்களை நிறுத்தி, வாகனப் பதிவு சான்றிதழ் (ஆர்சி புக்) உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளனவா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தேவையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை இயக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். விதிமீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திய பின்னரே வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.




You must be logged in to post a comment.