மருத்துவ வசதிகள் மேம்பாட்டுக்கு உறுதி – சிஐடியு நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினார்கள்
கோவை மாவட்ட ஆட்சியர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளின் நலன் மற்றும் மருத்துவ சேவைகளின் தரம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் நா. சுனில் ஆனந்த், கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் டாக்டர் சுமதி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திக் மகாராஜா, மருத்துவர்கள் டாக்டர் மனோகரன், டாக்டர் விஜய் கார்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளையும், அவர்களது உறவினர்களையும் சந்தித்து மருத்துவ சேவைகள் குறித்த குறைகள், தேவைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.
ஆய்வின் போது சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளான முகமது அலி ஜின்னா, ஷாநவாஸ், சாமுவேல், ஹபிபுல்லா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரிடம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மேம்பாடு தொடர்பான விரிவான கோரிக்கை மனுவை வழங்கினர்.
அந்த மனுவில்,
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத் தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
நவீன ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் மேம்பட்ட ஆய்வக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
நீரிழிவு, இருதய நோய் மற்றும் முதியோர் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகளை தொடங்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் ஓய்வு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு இலவச மருந்துகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தில் போதிய பாதுகாப்பு மற்றும் தூய்மை பராமரிப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.
என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
கோரிக்கைகளை கவனமாக பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை நேரில் கேட்டறிந்து, மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் மருத்துவ வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றும், மருத்துவமனையின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
மருத்துவமனை ஆய்வைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் வசதிகள், சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட தேவைகள் தொடர்பான பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சியரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவான தீர்வுகளை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினர்.





You must be logged in to post a comment.