வத்தலக்குண்டு அருகே, கட்டக்காமன்பட்டியில் குடிநீர் கேட்டு, கிராம பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு. அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
வத்தலக்குண்டு அருகே, கட்டக்காமன்பட்டியில் குடிநீர் கேட்டு, கிராம பொதுமக்கள் சனிக்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலகுண்டு அருகே, கட்டக்காமன்பட்டியில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, குடிதண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. சிறிதளவு வரும்
குடிநீரும் மஞ்சள் நிறத்துடன் சாக்கடை நீர் கலந்து வருவதால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் கண்டுகொள்ளாததால், ஆத்திரமடைந்த கட்டக்காமன்பட்டி பொதுமக்கள், காலி குடங்களுடன் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் வத்தலகுண்டு _ பெரியகுளம் தேசிய நெடுஞ்சாலையில் குடிதண்ணீர் கேட்டு, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் திண்டுக்கல் வத்தலகுண்டு, தேனி, கம்பம் குமுளி மற்றும் கோடை சீசனுக்கு கொடைக்கானல் செல்லும் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் நின்றது. இதனால், பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த வத்தலக்குண்டு காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கிருஷ்ணன் என்பவரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர், உடனடியாக சுத்தமான குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், இப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.




You must be logged in to post a comment.