ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷத்தில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், “தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின்படி அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர். மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி, விளைச்சல் இழப்பு, மழையின்மை மற்றும் கடன் சுமை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அரசு இன்று அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் முழுமையானதல்ல என்றும், அது வெறும் “கண்துடைப்பு நடவடிக்கை” என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனை தாங்கள் ஏற்க முடியாது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் முழுமையான பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டரங்கின் வெளியே கோஷங்கள்
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விவசாயிகள் கூட்டரங்கின் வெளியே திரண்டு “விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்”, “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று” எனக் கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “அரசு உடனடியாக மறுஆய்வு செய்து அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.