இராமநாதபுரத்தில் தொடர் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது
38 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் – தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லபை நகர், முத்தமிழ் நகர், நம்மாழ்வர் நகர் மற்றும் அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த சம்பவங்களில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்குகளை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இராமநாதபுரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன் வழிகாட்டுதலின் பேரில், காவல் ஆய்வாளர் சுந்தரேஸ்வரன் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 26.05.2026 அன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தேனி மாவட்டத்தில் அர்ஜூனன் (32), வேட்டைகாரன் (34) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து 38 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், 27.05.2026 அன்று உடைச்சியார் வலசை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலி பறித்துச் சென்ற முனீஸ்வரன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 2½ சவரன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், 28.05.2026 அன்று பஜார் காவல் நிலைய சரகத்தில் மூதாட்டியை ஏமாற்றி தங்க நகையை திருடிச் சென்ற சித்திரைவேல் (49) என்பவரையும் தனிப்படையினர் உடனடியாக கைது செய்தனர்.
அவரிடமிருந்து 4 சவரன் தங்க நகை கைப்பற்றப்பட்டது. தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படையினரையும், கேணிக்கரை காவல் நிலைய காவலர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் வெகுவாக பாராட்டினார்.




You must be logged in to post a comment.