அரசு மருத்துவமனையா..? அரசியல் கட்சியின் அட்ராசிட்டி கூடமா…? என எஸ்டிபிஐ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அரசு மருத்துவ மனையில் அத்துமீறி நுழைந்து ஆய்வு செய்த தவெக நிர்வாகிகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என SDPI கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் திவான் ஒலி விடுத்துள்ள கண்டன அறிக்கை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேகி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்து, மருத்துவர் போல வெள்ளை கோர்ட் அணிந்து, மருத்துவமனையின் வருகை பதிவேடு மற்றும் நோயாளிகள் சம்பந்தமான தகவல்களை ஆய்வு செய்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவ மனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே ஆய்வு செய்ய முடியும் என்ற விதியினை மீறி அரசியல் கட்சியினர் ஆய்வு செய்வது, பணியில் உள்ள மருத்துவர்களை அதிகார தோரணையுடன் கேள்வி கேட்பது “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்பது போல் ஆகிவிடும். ஆகவே சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பெண் நிர்வாகி மற்றும் உடன் சென்ற அனைவரின் மீதும் இந்திய நீதியியல் சட்டம் BNS (பிரிவு 221, 329) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் உரிய விசாரணை நடத்தி எவ்வித அரசியல் தலையீடும் இல்லாத அரசு மருத்துவமனை என்பதை உறுதி செய்யும் பொருட்டு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் திவான் ஒலி கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.