உலகளாவிய இடையூறுகள் மற்றும் சவால்களை நாடு எதிர்கொள்ள உதவும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வைக் குறைக்கவும், அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும் மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குடிமக்கள் பொது போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தவும், மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், கோவிட் கால நடவடிக்கைகளான வீட்டிலிருந்தே வேலை செய்தல் (WFH) மற்றும் ஆன்லைன் மீட்டிங் (Virtual meetings) மீண்டும் நடைமுறைப்படுத்தவும், ஒரு வருடத்திற்கு அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் வசதி உள்ள இடங்களில் அதைப் பயன்படுத்துங்கள். மற்ற இடங்களுக்குச் செல்ல ‘கார்பூலிங்’ (Carpooling) முறையைப் பின்பற்றுங்கள், சரக்குகளை ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தால் ரயில்வேயைப் பயன்படுத்துங்கள். இவை அனைத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தேவையைக் குறைக்கும், அதன் மூலம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நெருக்கடியை சமாளிக்கும் வகையில், “நாட்டையே அனைத்திற்கும் மேலாகக் கருதி நாம் சில தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்தல், மெய்நிகர் கூட்டங்கள், வீடியோ கான்பரன்சிங் போன்ற பல முறைகளை நாம் உருவாக்கினோம். அதற்கு நாம் பழகிவிட்டோம். அந்த முறைகளை மீண்டும் தொடங்குவதே இப்போதையத் தேவை. நடுத்தர மக்களிடையே வெளிநாடுகளில் திருமணம் செய்துகொள்வது, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது போன்ற கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடியான காலத்தில், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு பண்டிகைகளின் போது தங்கம் வாங்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்குமாறு நான் கூறி வருகிறேன். இது இந்த இக்கட்டான காலங்களில் நாட்டிற்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சுயசார்பு பாரதம் (Self-reliance) என்ற அடிப்படையில், நீங்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் பட்டியலைத் தயாரித்து, அதில் எவை வெளிநாட்டுப் பொருட்கள் என்பதைக் கண்டறியுங்கள். அதற்காக வெளிநாட்டுப் பொருட்களைத் தூக்கி எறிய வேண்டும் என்று அர்த்தமல்ல, கூடிய விரைவில் சுயசார்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
கோவிட் காலத்திலும் ‘வொக்கல் ஃபார் லோக்கல்’ (Vocal for Local) என்ற முழக்கத்தை நான் எழுப்பி இருந்தேன். நாட்டை சுயசார்புடையதாக மாற்ற இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்! இவ்வாறு பேசியுள்ளார்.




You must be logged in to post a comment.