ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே போலீசாரின் அதிரடி , சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த கார் சேஸில் இரண்டு கார்களில் இருந்து சுமார் 320 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினருக்கு, இரண்டு கார்களில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த வாகனங்களை ரகசியமாக கண்காணித்து பின்தொடர்ந்தனர்.
தொண்டி அருகே வந்தபோது கார்களில் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை உணர்ந்த கடத்தல்காரர்கள், போலீசாரை தவிர்க்க மின்னல் வேகத்தில் கார்களை ஓட்டிச் சென்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நடைபெற்ற அதிரடி துரத்தலில், ஒரு கார் பாண்டுகுடி வழியாகவும், மற்றொரு கார் மங்களக்குடி வழியாகவும் பிரிந்து சென்றன.
போலீசார் தொடர்ந்து விரட்டிய நிலையில், கடத்தல்காரர்கள் ஒரு காரை மங்களக்குடியிலும், மற்றொரு காரை அஞ்சுகோட்டை பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகினர்.
பின்னர் கைப்பற்றப்பட்ட இரண்டு கார்களையும் சோதனையிட்ட போலீசார், அவற்றில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ₹3.20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யார் இந்த கடத்தல் கும்பல்? கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டதா? என்ற கோணங்களில் ராமநாதபுரம் போதை நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




You must be logged in to post a comment.