தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள லட்சுமியூரில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததோடு அதனை தட்டிக் கேட்ட சிறுமியின் தாய் தந்தையரை அவதூறாக பேசி தாக்கிய நபருக்கு தென்காசி நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள லட்சுமியூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் – காளீஸ்வரி தம்பதியரின் மகள் 7 வயது சிறுமி கடந்த 12.02.2021 அன்று வீட்டில் தனியாக இருந்த போது, சிறுமியை அதேப் பகுதியைச் சேர்ந்த அன்னப்பாண்டி என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 34) சிறுமியிடம் செல்போனில் விளையாடலாம் என்று கூறி அழைத்து அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் சிறுமியின் தாயை அவதூறாக பேசியதோடு அவரது தந்தையை கல் வீசி தாக்கி கம்பால் அடித்துள்ளார். இது பற்றி சிறுமியின் தாயார் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றவாளி ராஜ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.ராஜவேலு எதிரி ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.