பழனி அருகே தேர்தல் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குப் பணியாற்றிய ஊர்க்காவல் படை வீரர் ராஜ்குமார், பாதுகாப்பு விதிகளை மீறி துணை ராணுவ வீரரின் துப்பாக்கியைப் பெற்று, அதனுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து, அது அந்தப் பகுதிகளில் வேகமாகப் பரவி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது ஆயுதங்களை அனுமதியின்றி கையாளுதல் மற்றும் அதனைப் புகைப்படமாக பதிவு செய்தல் கடுமையான விதிமீறலாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் குமார் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய ஊர்க்காவல் படை வீரர் ராஜ்குமார் மற்றும் துப்பாக்கியை வழங்கிய துணை ராணுவ வீரர் ஆகியோரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.




You must be logged in to post a comment.