மத்திய இணையமைச்சரும், அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன், தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு திமுக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலையை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.
பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிகரித்துள்ள வாக்கு சதவீதம் திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் காட்டுகிறது. திமுக அரசைத் தூக்கியெறியவே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்” என்றார்.
அவிநாசி தொகுதி நிலவரம் குறித்து பேசிய அவர், “அவிநாசியில் 100 சதவீதம் வெற்றி உறுதி. சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், மு.க. ஸ்டாலின் முன்வைத்த ‘திராவிட மாடல் 2.0’ குறித்து பதிலளித்த அவர், “அது வெறும் ஜீரோ தான்” என விமர்சித்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தை நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கையைப் பற்றி கேட்டபோது, “நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன” என்று கூறினார்.
இதன் மூலம், தமிழக அரசியல் சூழல் குறித்து பாஜக தரப்பின் கடும் விமர்சனத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.




You must be logged in to post a comment.