இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு “வாக்கத்தான்” பேரணி இன்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதில் விழிப்புணர்வு பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த “வாக்கத்தான்” பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
காவல் துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, வாக்களிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
ஹெலிபேடு அருகில் துவங்கிய பேரணி, டி-பிளாக் பகுதிவரை நடைப்பயணமாக சென்று நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் “ஒவ்வொருவரும் வாக்களிப்போம் – ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்” என்ற முழக்கங்களை எழுப்பி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.