கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்:
நீலகிரி மலை ரயில் தனது 153வது ஆண்டு பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சிறப்பான விழா நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த மலை ரயிலில், உலக பாரம்பரிய தினம்-ஐ முன்னிட்டு கேக் வெட்டி பயணிகளுக்கு வழங்கி விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வை சேலம் கோட்டத்தின் மூத்த இயந்திர பொறியாளர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ரயில் நிலைய காவல்துறையினர் இணைந்து நடத்தினர். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உற்சாகமாக பாரம்பரிய தினத்தை கொண்டாடினர்.
பின்னர், மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குச் செல்லும் மலை ரயில், பயணிகள் மற்றும் பொதுமக்களின் கைதட்டலுடன் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றது.
19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நீலகிரி மலை ரயில், இந்தியாவின் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க மலை ரயில் சேவைகளில் ஒன்றாகும். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை சுமார் 46 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் இந்த ரயில், 200-க்கும் மேற்பட்ட வளைவுகள், பல பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழியாக இயற்கை அழகுகளை நெருங்கிப் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.
மேலும், இந்த மலை ரயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இந்த பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பாரம்பரிய தினக் கொண்டாட்டம், மலை ரயிலின் வரலாற்றுப் பெருமையையும் சுற்றுலா முக்கியத்துவத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.





You must be logged in to post a comment.