நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் திட்டமாக, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850ஆக அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போன்ற மசோதாக்களை இன்று நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இம்மசோதாக்களின் படி மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, பெண்களுக்கு 280 இடங்களாக ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளது என்றும், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கே அதிக தொகுதிகள் சேரும் வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே 1967-இல் நடத்தப்பட்ட மறுவரையறையில் 2 தொகுதிகளை இழந்த தமிழ்நாடு 41 தொகுதிகளிலிருந்து 39ஆக மாறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நேற்று அவசர அவசரமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில் தொகுதி மறுவரையறை என்பது தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான அநீதி என்றும், பாஜக நெருப்போடு விளையாடுகிறது என்றும் கூறிய ஸ்டாலின், இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அந்தவகையில் இன்று கருப்புக்கொடியை ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருடைய எக்ஸ் பதிவில், “Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!” என பதிவிட்டுள்ளார்.




You must be logged in to post a comment.