மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் தேமுதிகவிற்கு தலா 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்றுவரும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மறுபுறம், மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களைத் தேர்தல் தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டியே வருவதால், அத்தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் முக்கியப் பங்கு வகித்தது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகவிருக்கும் நிலையில், 4 இடங்கள் திமுக வசம் இருக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (மார்ச் 5) மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக திமுக – காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டதில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கு 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற 2 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. தவிர, அந்த இரண்டு இடங்களுக்கான வேட்பாளர்களையும் திமுக அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக தரப்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவுக்கு ஏற்கெனவே ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




You must be logged in to post a comment.