தென்காசி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்-2026 ஐ இன்று (09.09.2026) பாட்டாக்குறிச்சி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில் தெரிவித்ததாவது. அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு வருடமும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் நிறைய பேர் கலந்து கொள்கின்றனர். 5 வகையாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து அரசு அலுவலர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், தனித்தனி வகையாக விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றது. மொத்தமாக 45 விளையாட்டுகளுக்கு இதில் பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்பு தான் மிகவும் முக்கியம். வெற்றியோ தோல்வியோ அது இரண்டாவது தான்.
விளையாட்டுகளில் பங்கேற்கும் போது தான் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். குழுவாக செயல்படுதல், பங்கேற்பு, தலைமைத்துவம் போன்றவற்றை நாம் பங்கேற்பதன் மூலம் கற்றுக் கொள்ளலாம். குழு விளையாட்டுகளில் தலைமைத்துவம் மிகவும் முக்கியமான ஒன்று. குழுவின் செயல்பாடுகளும் கடின உழைப்பும் தேவை. இந்த விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் நம் வருங்காலம் நன்றாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் சார்பில் உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றாலும் செய்து தருகிறோம். நம் திறமையை காட்டுவதற்கு இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டால் நாம் அதில் பங்கேற்க வேண்டும். அதற்காகவே இது போன்ற வாய்ப்பு அமைத்து தந்துள்ளோம். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு அலுவலர்களும் கலந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு அவர்களும் இதில் பங்கேற்க முன் வர வேண்டும். முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். விளையாட்டுகளில் கலந்து கொள்ள வந்துள்ள அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் படி, “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 2026-27-ம் ஆண்டில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர். மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 45 விளையாட்டுகள் தென்காசி மாவட்ட, திருநெல்வேலி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் 28.09.2026 வரை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர். இப்போட்டியானது சென்னை உட்பட பெருநகரங்களில் அக்டோபர் 4 முதல் நடைபெறவுள்ளது. இம்மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டும் மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும் மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஈராஜா, மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் இளங்கோ மற்றும் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.